Saturday, July 7, 2012

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல் - அது என்னவென்று தெரியவில்லை! ஏதோ இந்தியா விடுதலை பெற்ற பின் இப்போது தான் முதல் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கப் போகிற மாதிரி நம் தொ(ல்)லை காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தத் தேர்தல் பற்றி தான் ஒரே பேச்சு. ஒருவேளை இது வரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களின் போது  நான்தான் நாட்டு நடப்பு தெரியாதவனாக இருந்தேனா? அல்லது இந்த முறை ஊடகங்கள் கொஞ்சம் அளவுக்கு மேல் மிகைப்படுத்துகிறார்களா (over hype குடுக்கிறார்களா) என்று தெரியவில்லை. சரி, திரும்பிய பக்கமெல்லாம் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றியே பேசுகிறார்களே, அப்படி என்ன தான் நடக்கும் இதில்? குடியரசுத் தலைவரை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிந்து கொள்ள எண்ணினேன். குடியரசுத் தலைவர் பற்றின எல்லா விளக்கமும் நமது இந்திய அரசியலமைப்பில் (Constitution of India) கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பாக குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி article 55 ல் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவராக யார் ஆகலாம்? அதற்கு என்ன தகுதி வேண்டும்? இது போன்ற விவரங்களைத் தவிர்த்துவிட்டு முதலில் குடியரசுத் தலைவர் தேர்தல் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குடியரசுத் தலைவரை மக்களாகிய நாம் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது, மக்கள் சார்பாக மக்களின் பிரதிநிதிகளாகிய MLA-க்களும் (மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்) MP-க்களும் (நாடாளுமன்ற உறுப்பினர்கள் ) தேர்ந்தெடுப்பார்கள். ஆக, குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை MLA-க்களும் MP-க்களும் தான் வாக்காளர்கள்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த MLA-க்கள் (மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்) குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே, சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் (Members of Legislative Council) இதில் வாக்களிக்க மாட்டார்கள்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் என்கிறோம், அதாவது மாநிலங்கள் மட்டுமே ஆனால் விலக்காக யூனியன் பிரதேசங்களான (ஒன்றியப் பகுதிகள்) புதுச்சேரி மற்றும் தில்லியின் சட்ட மன்ற உறுப்பினர்களும் (MLA) இதில் வாக்களிக்கலாம். மற்ற ஒன்றியப் பகுதிகளலெல்லாம் இல்லாமல் ஏன் தில்லி மற்றும் புதுச்சேரி மட்டும்? ஏனென்றால் தில்லி மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளுக்கு மட்டும் தான் சட்டமன்றம் உள்ளது மீதமுள்ள ஒன்றிய பகுதிகளுக்கு சட்டமன்றம் கிடையாது.

சரி, மக்களின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள் என்று கூறுகிறோம், மக்கள் சார்பாக ஒரு MLA-வோ ஒரு MP-யோ அளிக்கின்ற வாக்கை (vote) வெறுமனே ஒரு வாக்காக எண்ணிக்கை வைக்க முடியுமா? அதனால் proportional representation முறையில் ஒவ்வொரு MLA மற்றும் MP-யின் வாக்கிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பீடு வழங்கப்படும். ஒரு MLA-வின் வாக்குக்கு கொடுக்கப்படும் மதிப்பீடு மாநிலத்தை பொருத்து வேறுபடும், ஆனால் அனைத்து MP-க்களின் வாக்குக்கும் ஒரே மதிப்பீடு தான்.

ஒரு MLA-வின் வாக்கு அந்த மாநில மக்கள் தொகையை வைத்து கணக்கெடுக்கப்படும். இது தான் அதற்கான formula.
ஒரு MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை/(மாநிலத்தின் மொத்த MLA-க்களின் எண்ணிக்கை * 1000)

இதனால் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் அந்த மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொருத்து அந்த மாநில MLA-க்களின் வாக்கு மதிப்பீடு வேறுபடும்.
எடுத்துகாட்டாக, ஒரு கோடி (1,00,00,000) மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தின் மொத்த MLA-க்களின் எண்ணிக்கை நூறாக (100) இருக்குமானால், குடியரசுத் தலைவர் தேர்தலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த
                   ஒரு MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = 1,00,00,000/(100*1000) = 100

அதே போல் இரண்டு கோடி (2,00,00,000) மக்கள் தொகை, 150 MLA-க்கள் கொண்ட மாநிலத்தை சேர்ந்த
                   ஒரு MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = 2,00,00,000/(150*1000) = 80

சரி MLA-க்கள் பத்தி பார்த்தாச்சு இப்ப MP-க்களைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொரு மாநிலத்தைப் பொருத்து MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு மாறும். ஆனால் இந்தியாவின் அனைத்து MP-யின் வாக்குக்கும் ஒரே மதிப்பீடு தான்.
   ஒரு MP-யின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = அனைத்து மாநில MLA-க்களின் மொத்த வாக்கு மதிப்பீடு / மொத்த MP-க்களின் எண்ணிக்கை

வாக்களிக்கும் முறை
இப்படி MLA மற்றும் MP-க்களின் வாக்கு மதிப்பீடு பற்றி பார்த்தாச்சு.
குடியரசுத் தலைவர் தேர்தல் மற்ற பொது தேர்தல்களைப் போல் இல்லாமல் விருப்ப வரிசை வாக்கு (preferential voting) முறையில் நடத்தப்படும்.
அதாவது, எடுத்துகாட்டாக ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் வாக்காளர்கள் இந்த ஐந்து பேரில் ஒன்றாம், இரண்டாம், முன்றாம் விருப்பம் என்ற விருப்ப (preference) வரிசைப்படி வாக்களிக்கலாம்.

வாக்கு எண்ணிக்கை முறை:
வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் அனைத்து முதலாம் விருப்ப (1st preference) வாக்குகளை எண்ணுவார்கள். அதில் எவரேனும் ஒரு வேட்பாளர் ஐம்பத்தியொரு விழுக்காடிற்கு (51%) மேற்ப்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தால் அவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை அப்படி எந்த ஒரு வேட்பாளரும் ஐம்பத்தியொரு விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்றால் முதலாம் விருப்ப வாக்குகள் எண்ணிக்கையில் கடைசி இடம் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு மீதமிருக்கும் வேட்பாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்து இரண்டாம் விருப்ப வாக்குகளை மட்டும் எண்ணுவார்கள். இதில் எவரேனும் ஒருவர் ஐம்பத்தியொரு விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தால் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இல்லையென்றால் இந்த முறை கடைசி இடம் பெற்றவர் நீக்கப்பட்டு அடுத்த நிலை விருப்ப வாக்குகளை எண்ணத் தொடங்குவார்கள். இப்படியாக ஒரு வேட்பாளர் ஐம்பத்தியொரு விழுக்காடு வாக்குகளைப் பெறும் வரையில் ஒவ்வொரு நிலையிலும் கடைசி இடம் பெற்றவர் நீக்கப்பட்டு அடுத்த நிலை விருப்ப வாக்குகளை எண்ணுவார்கள்.
இப்படி எண்ணிக்கையின் இறுதியில் வெற்றிபெற்றவர் அடுத்த குடியரசுத் தலைவராகப் பதவியேற்பார்.

Sunday, January 1, 2012

தேர்ச்சி

"48512, இளமாறன்"
"Yes sir"
"48513"

வகுப்பறை முழுவதும் அமைதி...

"48513, கபிலன். கபிலன் இன்னைக்கும் வரலையா?"
"இவனல்லாம் எதுக்கு Engineering Collegeல சேர்றான். ஒரு seatட்ட waste பண்ணிக்கிட்டு" என்று சலித்துக்கொண்டே பதிவேட்டில் மாணாக்கர்களின் வருகை பதிவிடுதலைத் தொடர்ந்தார் விரிவுரையாளர் குமரன்.

"Students அடுத்தவாரம் second internal test இருக்கு ஞாபகமிருக்குல. நல்லா prepare பண்ணிக்கோங்க" என்று கூறிவிட்டு இளமாறனை அழைத்தார். "இளமாறன், நீ அடுத்த class முடிஞ்சதும் labக்கு வந்து என்ன meet பண்ணு. அடுத்த மாசம் IIT மும்பைல ஒரு conference இருக்கு அத பத்தி பேசனும்", என்று கூறிச்சென்றார். அருகிலிருந்த மற்ற மாணவர்கள் இளமாறனைப் பார்த்து "மாப்ள! கலக்குற டா IIT conferenceக்குலாம் போகப் போற போல?!" என வியப்புடன் வினவினர்.
"அப்படிலாம் பெருசா நான் எதுவும் பண்ணல டா, அது குமரன் சாரோட research work, நான் சின்ன சின்ன உதவி தான் பண்றேன். ஏதோ classக்கு ஒழுங்கா வர்றேன் CGPAலாம் நல்ல வச்சிருக்கேன்னு என்ன சேர்த்துகிட்டார். அவ்வளோ தான்" என்று கூறி முடித்தான் இளமாறன்.

மணி அடித்தது. வகுப்பு முடிந்தது. வரண்டாவில் தூண்களுக்குப் பின்னே, யார் கண்ணிலும் பட்டுவிடாமல், பாய்வதற்கு முன் பதுங்கும் புலியைப் போல கபிலன் ஒளிந்து நின்றான். கபிலனின் கெட்ட நேரம், விரிவுரையாளர் குமரன் வெளிவருவதும் அவன் உள்ளே செல்வதும் ஒன்றாக நிகழ்ந்தது. 'அடச்சே! யார் கண்ணுல படக்கூடாதுன்னு நெனச்சேனோ அவர்ட்டையே மாட்டிட்டேனே' என மனதுக்குள் நினைத்தான். இருந்தாலும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் வகுப்பறைக்குள் சென்றான்.

"ச்ச! மச்சி class cut அடிச்சுட்டு அதுவும் அவர் முன்னாலையே தைரியமா உள்ள வர்றியே! தல நீ கெத்து தல!" என எப்போதும் போல கபிலனை ஏத்திவிட்டான் வெற்றிமணி. 'இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்குறீங்களே டா!' என்ற வடிவேலுவின் வசனம் மனதுக்குள் ஓடினாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாத கபிலன், "டேய் வெற்றிமணி! நான் நல்லாயிருக்குறது உனக்கு புடிக்கலையா டா" என்று கூறியவாறே சென்று இரண்டாம் வரிசையில் காலியாகயிருந்த இடத்தில் அமர்ந்தான்.

அடுத்த வகுப்பிற்கான விரிவுரையாளர் வந்தார். வகுப்பு தொடர்ந்தது.

மறுநாள் விரிவுரையாளர் குமரன் வகுப்பிற்குள் நுழைந்தார். வந்தவுடன் கபிலன் வந்திருக்கிறானா என்று தேடினார். அவன் இருப்பதை பார்த்ததும், "நேத்து ஏம்ப்பா என்னுடைய classக்கு வரல?" என்று கேட்டார். இந்தக் கேள்வியை எதிர்பார்த்தே காத்திருந்த கபிலன் "Sir நேத்து காலைல ஒரே தல வலி அதான் Sir வரல" என்று கூறி மழுப்பினான். இதற்கு பின் விரிவுரையாளர் குமரனிடம் அவன் ஏற்கனவே பெற்றிருந்த அவப்பெயர் மேலும் அதிகரித்தது. வகுப்பு தொடர்ந்தது.

மறுவாரம் இடைத்தேர்வுகள் தொடங்கின. அன்று Network Security தேர்வு (விரிவுரையாளர் குமரனின் பாடம்). மாணவர்கள் எதிர்பார்த்தது போல் கேள்விகள்யாவும் கடினமாகவே இருந்தன. எல்லாவற்றையும் படித்து வந்த இளமாறனுக்கும் கூட ஒரு கேள்விக்கு எப்படி விடையளிப்பதென்று தெரியவில்லை. "சரி, தெரிந்த கேள்விகளுக்கு விடையளித்துவிட்டு பிறகு மற்றதை கவனித்துக்கொள்ளலாம்!" என்று முடிவெடுத்து எழுதத் தொடங்கினான். எழுதிக்கொண்டிருக்கும் போது தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் கபிலன் என்னதான் செய்கிறான் என்று பார்க்கலாமென்று கபிலனின் விடைத்தாளைப் பார்த்தான். இளமாறன் எந்தக் கேள்விக்கு விடைத்தெரியாமல் கடினமானதென்று நினைத்திருந்தானோ அந்த
கேள்விக்கு விடை எழுதிக்கொண்டிருந்தான் கபிலன். இளமாறனுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. 'சரி, ஆச்சர்யப் படுறத exam முடிஞ்சதுக்கு அப்புறம் வைச்சுகலாம், இப்போதைக்கு அலார்ட்டா இருந்து காட்ற வெளாட்ட...' என்று மனதுக்குள் முடிவெடுத்து கபிலனின் விடைத்தாளைப் பார்த்து copyயடித்தான். தனக்குத் தெரியாத அந்த ஒரே கேள்வியை எழுதிக்கொண்டான். பின்னர் தனக்குத் தெரிந்த கேள்விகளுக்கு விடையளிக்கத் தொடங்கினான். சிறிது நேரம் கழிந்தது.

கபிலன் "Sir, exam எழுதி முடிச்சுட்டேன் இந்தாங்க Sir answer sheet" என்றான்.

"என்னது! அதுக்குள்ள முடிச்சுட்டியா? எங்க answer sheet காட்டு, அப்படி என்னதான் எழுதியிருக்கன்னு பார்ப்போம்?" என்றார் மேற்பார்வையாளர். "ஏ! என்னப்பா ஒரே ஒரு பெரிய questionக்கு மட்டும் answer பண்ணிருக்க. மத்த கேள்விக்கெல்லாம் எதுவுமே எழுதல? exam முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. அதுவரைக்கும் மத்த கேள்விகெல்லாம் ஏதாவது எழுதுப்பா." என்று கூறி அவனை அமரவைத்தார்.

தேர்வு நேரம் முடிந்தது அனைவரும் விடைத்தாளை மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு வெளியேறினர். தேர்வறையை விட்டு வெளியே வந்தவுடன் இளமாறன் கபிலனிடம் சென்றான்.
"டேய் மாப்ள! எப்படிடா அந்த பெரிய கேள்விக்கு answer பண்ணின? Bookல இருந்த மாதிரி தெரியலையே? நிச்சயமா சொல்லறேன் நம்ம பசங்க யாருமே அந்தக் கேள்விக்கு answer பண்ணியிருக்க மாட்டாங்க" என்றான்.
"நான் அந்த questionக்கு answer பண்ணினேன்னு உனக்கு எப்படி தெரியும்?"
"அட நான் உன்ன பார்த்துத்தான் அந்தக் கேள்விக்கு answer எழுதினேன். சரி, உனக்கு எப்படி அந்த answer தெரியும்?" என்றான் இளமாறன்.

"ஓ! அது bookல இருக்காயில்லையானு எனக்கு தெரியாது, ஆனா அது தான் நம்ம குமரன் sir கடைசி classல நடத்தின கணக்கு".

இளமாறனுக்கு ஆச்சர்யம் கூடியது.

"எப்படிரா இப்படி? classல நடத்தினதவச்சு answer எழுதினியா? அவர் நடத்தினதெல்லாம் கவனிச்சியா?".

"ஆமா டா நான் classக்கு வந்தா அந்த classல நடத்தினதெல்லாம் கவனிப்பேன்" என்றான் கபிலன்.

இளமாறனுக்கு மேலும் மேலும் ஆச்சர்யமாகவே இருந்தது.


"டேய்!  நீ இவ்வளோ talented guyயா? சரி, தெரியாத மத்த கேள்விக்கு என்ன மாதிரி பாக்கத்துல இருக்கிறவங்க paperர பார்த்து எதையாவது எழுதலாம்ல. கூட கொஞ்சம் mark கெடைக்கும், உனக்கு வாத்தியாருங்க மத்தியில கெட்டப்பெயராவது வராதுல".

"மச்சீ, நெறையா mark எடுக்கனும்ன்னு நெனச்சிருந்தா நான் எல்லாத்தையும் படிச்சுட்டு வந்திருப்பேன் டா. எதுக்கு கஷ்டப்பட்டு காப்பி அடிச்சு mark எடுக்கனும். அஞ்சு markக்கோ அம்பது markக்கோ எவ்வளோ எடுத்தாலும் எனக்கு தெரிஞ்சத எழுதி எடுத்தா  போதும். எனக்கு நெறையா mark எடுக்கனும்ன்னு ஆர்வம் இல்ல டா. அப்படி இருந்தா நான் எல்லாத்தையும் ஒழுங்கா படிச்சிட்டு வர மாட்டேனா? நீ சொன்ன மாதிரி நான் talented தான், அரகுற திறமைசாலி. ஆனா நீ சாமர்த்தியசாலி டா அதான் உனக்கு தேவையானத எப்படினாலும் achieve பண்ணனும்ன்னு நெனைக்குற, எல்லார் முன்னாடியும் நல்ல புள்ளையா நடந்துகிற. இப்போ கூட answer sheet திருத்தி வரும் போது நம்ம class பசங்க எல்லாரும் இந்த கேள்விக்கு நான் உன்ன பார்த்து copy அடிச்சேன்னு தான் நினப்பாங்க. ஆனாலும் எனக்கு இத பத்திலாம் கவல இல்ல டா. நான் கெளம்புறேன்" என்று கூறி முடித்தான் கபிலன். இளமாறனிடமிருந்து விடைபெற்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கபிலன்.

 'வெறுமனே attendanceக்காக classக்கு வருவது,
 markக்காக படிப்பது, பக்கங்களை நிரப்புவதற்காக தேர்வு எழுதுவது' என்றிந்த இளமாறனுக்கு  உண்மையாக தேர்ச்சி பெறுவது என்னவென்று  விளங்கியது.